பழமொழியைப் பகிர்வோம்!


“சொறிந்து தேய்க்காத எண்ணெய்யும்,
பரிந்துகூறாத விருந்தும் பயன்தராது”
என்பது பழமொழி.
முற்காலத்தில் எல்லாம் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்று சொல்வார்கள். எண்ணெய்ச்சத்து உடம்பிற்குவேண்டும். அப்பொழுதுதான் மேனி மினுமினுப்பாக இருக்கும். குறிப்பாக, தலைமுடி அதிகம் இருப்பவர்கள் முடிக்காம்பு வழியாகத் தலைக்கு எண்ணெய் சேர்ந்து குளிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதால், கைகளால் நன்கு சொறிந்து, அழுத்தித் தேய்க்கச் சொல்வார்கள்.
மேலோட்டமாகத் தேய்த்தால் உள்ளே எண்ணெய் சென்று சேராது, அதனால் பலன் நமக்குக் கிடைக்காது. சிலர் அவசர அவசரமாகக் ‘காக்கைக் குளியல்’ குளிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவசர வேலையின் காரணமாக அப்படிக் குளிப்பார்கள். தலையில் மட்டும் எண்ணெய்யைத் தேய்த்துக்கொண்டு குளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
எண்ணெய்ச்சத்து உடலில் இருந்தால்தான் தோலில் வறட்சி ஏற்படாது, சுருக்கம் ஏற்படாது, அரிப்பும் இருக்காது. அப்படிப்பட்ட எண்ணெய் நம் உடலுக்குள் செலுத்துவதற்குமசாஜ் செய்தல்’ என்று சொல்வார்கள். தலையில் எண்ணெயைத் தேய்க்கும்பொழுது அழுத்தித் தேய்க்கவேண்டும், சொறிந்து தேய்க்கவேண்டும். எண்ணெயை உடம்பில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தலையில் தேய்ப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சொறிந்து தேய்க்காத எண்ணெய் சுகத்தைக் கொடுக்காது’ என்றார்கள்.
பரிந்து ஊட்டாத விருந்தால் பலன் இல்லை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். சிலர் நம்மை விருந்திற்கு அழைப்பார்கள். நாம் அவர் வீட்டிற்குச் சென்றால், கூட்டம் அதிகமாக இருக்கும். நம்மை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நம்மைக் காட்டிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை அவர்கள் விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். உடனே நமக்குக் கோபம் வரும். அதை அடக்கிக்கொண்டு அவர்கள் முன்னால் நாம் அமைதியாக இருப்போம்.
இப்படி ‘மதியாதார் வீட்டிற்கு நாம் ஏன் வந்தோம்’ என்று மனதிற்குள் அசைபோட்டுப் பார்ப்போம். எனவேதான், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்று அவ்வை அன்றே சொல்லி வைத்தார். இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு விருந்தை உண்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவோம்.
விருந்து வைக்க நினைப்பவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப் பரிந்து உபசரிக்க வேண்டும். பக்கத்தில் நின்றுகொண்டு ‘இதைச் சாப்பிடுகிறீர்களா, அதைச் சாப்பிடுகிறீர்களா’ என்று பலகாரங்களை எடுத்து எடுத்து வைக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் மனம் திருப்திப்படும். ஏனோ, தானோ என்று நடந்துகொண்டால் இதயம் புண்படும். இந்தக் கருத்தையே பழமொழி வாயிலாக முன்னோர்கள் நமக்குப் பதித்துவைக்க விரும்பி, “சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து அளிக்காத விருந்தும் பயனில்லை” என்று சொல்லி வைத்தார்கள்.
‘நாட்சென்ற கொடை நடை கூலியாகும்’ என்பது ஒரு பழமொழி.
ஒரு சிலர் 'கொடை வள்ளல்' என்று பெயர் எடுத்துக் கொண்டிருப்பர். ஆனால் கொடுக்கும் குணம் ஓரளவுக்குத்தான் இருக்கும். யாரேனும் உதவி கேட்டால் 'நான் கொடுப்பேன்' என்று மேடைகளில் சொல்வார்கள். பலர் கூடுகிற இடத்தில் விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உதவி கேட்டால் அவர்களை அலைய விடுவார்கள். "திங்கட்கிழமை வாருங்கள் பணம் தருகிறேன்" என்பார்கள். சென்று கேட்டால், "அடுத்த திங்கட்கிழமை வாருங்கள்" என்று ஒத்திப்போடுவார்கள். அடுத்த திங்கட்கிழமை சென்றால், "வரும் வியாழக்கிழமை வாருங்கள்" என்பார்கள். அவர்கள் சொன்ன நேரத்திற்குச் சென்றுபார்த்தால் வெளியூருக்குச் சென்றிருப்பார்கள். அங்கிருந்து தொலைபேசிமூலம் தொடர்புகொண்டால், "வேலை நிமித்தமாகச் சென்னை வந்துவிட்டேன். வந்ததும் பார்க்கிறேன்" என்றும் சொல்வார்கள்.
இப்படியே நாளும் பொழுதும் ஓடிவிடும். நன்கொடை கேட்க வந்தவர் சலித்துப் போய்விடுவார். பிறகு, என்றைக்காவது ஒருநாள் அவர் உதவி செய்தாலும் அதனால் பலன் கிடைக்காது, அவசரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலாது. எனவேதான், நாட்சென்ற நன்கொடை நடை கூலியாகக் கருதப்படுகிறது என்று சொல்லி வைத்தார்கள். Thanks : dhoppulkodi.blogspot.com

கருத்துகள்