வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?




பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.
குத்தாட்டம்

குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

நன்றி வினவு .காம்

கருத்துகள்