மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!

மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!

                                                               



காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன்.

பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்ப்டும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான வாழ்க்கையை நவநாகரீகம் என்ற பெயரில் கடை பிடித்து வரும் மேலை நாடுகளில் கூட நடக்காத அளவுக்கு நமது இந்திய தேசத்தில் அதிகமாகி விட்டதே என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த கட்டுரை!


இதுபோன்ற சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணம் மதுப்பழக்கம் இரண்டாவது காதல் என்ற தகவலே வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினரால் கூறப்படுகிறது.

மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகங்கள் தங்களது வாழ்க்கைப்பற்றியோ,அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை பற்றியோ அக்கறை இல்லாதவர்கள்.

காரணம் அவர்களது சிந்திக்கும் திறனை ஆல்கஹால் என்னும் கொடிய விஷம் அழித்து விடுகிறது இது போன்ற குடிகாரன்களுக்கு தாய் யார்?தாரம் யார்? சகோதரி யார்?மகள் யார்?என்ற பாகுபாடு எதுவும் தெரிவதில்லை.

 மொத்தத்தில் பெண்ணாக இருந்தால் போதும் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற மிருகத்தின் புத்தியே மேலோங்கி நிற்கும்.அதன் விளைவே சமீபகால ஊடகங்களில் பதிவாகி வரும் கற்பழிப்பு நிகழ்வுகள்.

2012 டிசம்பர் இறுதி வாரத்தில் மட்டுமே எத்தனை சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது.

கடந்த டிசம்பர் 16 ந்தேதி தேசத்தின் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ கல்லூரி மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு ஓடும் பேரூந்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.(குறிப்பு)இந்த மாணவி டிசம்பர் 30 ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

20 ந்தேதி தூத்துக்குடியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 13வயதான 7 ம் வகுப்பு மாணவி சுப்பையா என்ற காமக்கொடூரனால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.(குறிப்பு)சுப்பையா மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகம்.

 டிசம்பர் 24 ந்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் வீட்டில் இருந்த 18 வயது பெண்ணை பேரூந்து ஓட்டுனர் ஒருவரும் அவனின் நண்பனும் தூக்கிச்சென்று கற்பழித்துள்ளனர்.

24 ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் இரவு 9 மணியளவில் ஒரு பெண் அழுதபடி வந்துள்ளார் பொதுமக்கள் விசாரித்த போது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தனது காதலனின் கண்முன்னே தன் துப்பட்டாவால் கட்டிப்போடப்பட்டு தன்னை 4 பேர் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

(குறிப்பு)இரவு நேரத்தில் காதலனுடன் இருந்த பெண்ணை ஒழுங்கீனமானவள் என்ற பார்வையில் கயவர்கள் கற்பழித்துள்ளனர்.

இதே நாளில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நேபாளத்தை சேர்ந்தவர்களின் 2 வயது குழந்தை   சொந்த தாய் மாமனால் கற்பழிக்கப்பட்டு இறந்து போனது.

இதே நாளில் மும்பை பாந்த்ரா கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவியை அவருடன்  படிக்கும் மாணவர் ஒருவர் காதலிக்க மறுத்த காரணத்தால் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதே நாளில் மத்தியபிரதேசத்தில் குழந்தைக்கு சிகிச்சை எடுக்க வந்த பெண் கழிப்பறையில் மருத்துவமனை ஊழியர்கள் 3பேரால் கற்பழிக்கப்பட்டார்.

இதே நாளில் டில்லி அருகே உள்ள பைசாபாத் நகரில் காரில் கடத்தப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த மைனர் பெண் டில்லி கொண்டு செல்லப்பட்டு 4பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அந்த சிறுமியை சாலையோரம் வீசிவிட்டு தப்பிய பயங்கரவாதிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

டிசம்பர் 25 ந்தேதி  அன்று சிதம்பரம் முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தை சேர்ந்த 20வயது பெண் அவர் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டுடியோவில் வைத்தே கற்பழிக்கப்பட்டு 3வது மாடியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டுள்ளார்.

இதே நாளில் கொல்கத்தா பஸ் டிப்போவில் நின்று கொண்டிருந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த 40வயது மாற்றுத்திறனாளி பெண்ணை 28 வயது மனித வடிவிலான மிருகம் நிர்வாணமாக்கி கற்பழிக்க முயன்றுள்ளான் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து மிருகத்திடமிருந்து அந்தப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

டிசம்பர் 26ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 42வயதான பெண் இரவு நேரத்தில் 3 மனித மிருகத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இதே நாளில் நீலகிரி மாவட்டம் நிலாகோட்டை அருகேயுள்ள கிராமத்தில் 47வயதுள்ள ஒருவர் 17வயதான தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அவரது பெயர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.(குறிப்பு)இதில் தொடர்புடையவனும் முழு நேரக்குடிகாரன் என்பதால் பெற்ற மகளையே கற்பழித்துள்ளான்.

இதே நாளில் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் பகல் நேரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 11வயது சிறுமியை மர்ம நபர் கற்பழித்து விட்டு தப்பியோடி விட்டார்.

டிசம்பர் 27 ந்தேதி அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 9வயதான 4ம் வகுப்பு மாணவி இரவு 7.30மணியளவில் அருகில் உள்ள வாழை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

மேலே கண்ட தகவல்கள் அனைத்தும் தினசரி பத்திரிக்கைகளில் பதிவு செய்யப்பட்டவைகள்தாம்!இதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக தலை சுற்றல் ஏற்பட்டிருக்கும்.நான் படித்து தெரிந்தவைகள் மட்டும் தான் இவைகள்.

 இதில்லாமல் எத்தனையோ கற்பழிப்பு நிகழ்வுகள் நாட்டில் நடந்து நமக்கு தெரியாமலும் போயிருக்கலாம்.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடந்ததல்ல,தேசத்தின் பல்வேறு பகுதியிலும் நடந்துள்ளவையாகும். தற்போதைய நிலையில் பகல் நேரத்தில் கூட பெண்கள் வெளியில் வர அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற அசம்பாவிதங்கள் ஏன்?எப்படி நடக்கிறது? என்ற கேள்விக்கு மதுவும் ஒழுங்கீனமான வாழ்க்கையும் தான் என பதில் வருகிறது.

குடிப்பழக்கம் தனியொரு மனிதனை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தையும் நாசம் செய்து விடுகிறது.மதுவை ஒழிக்க வேண்டிய ஆட்சியாளர்களோ ரேஷன்கடைகளை போல ஒவ்வொரு தெருவிலும் ஒரு மதுக்கடையை திறந்து வைத்து குடிக்காதவனையும்  குடிக்க வைக்கும் மது தீவிரவாதத்தை வளர்த்து வருகின்றனர்.

எங்கெல்லாம் மதுக்கடைகள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு கிடக்கின்றன நாம் மேலே கண்ட மிகுதியான கற்பழிப்பு சம்பவங்களுக்கு குடிப்பழக்கமே காரணம் என்பதை மறுத்து விட முடியாது.கொலை செய்தவனுக்கு கொடுக்கும் தண்டனையை விட கொலை செய்ய தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம் உண்டு என்ற விஷயம் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி எது தெரியுமா?

அதிகமான கற்பழிப்பு சம்பவங்களுக்கு குடியும் ஒரு காரணமென்றால் குடியை ஊக்குவிக்கும் (குடி)ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

மதுவின் தீங்கை பற்றி திருக்குர்-ஆனும், திரு நபியும் பல்வேறு கோணங்களில் எச்சரிக்கை செய்துள்ள விஷயத்தை கொஞ்சமேனும் ஜாதி மத பேதமில்லாமல் யோசித்துப் பார்த்தோமானால் மதுவினுடைய தீங்கிலிருந்து ஒட்டு மொத்த மனித குலமும் பாதுகாக்கப்படுவோம்.

மதுவின் தீங்கைப்பற்றி இதோ திருக்குர்-ஆன் எச்சரிக்கிறது பாருங்கள்,உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின்பால் போட்டுக்கொள்ளாதீர்கள்!(அத்தியாயம் 2-வசனம் 195)மது அருந்தியவன் பகுத்தறிவை இழந்து விடுகிறான்!(முஹம்மது நபி)

மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி போராடிவரும் போராளிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க முன் வர வேண்டியது காலத்தின் அவசியமட்டுமல்ல,அவசரமும் கூட!

                                                     மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்!

moulavi keelai jahangeer aroosi

dammam.

கருத்துகள்