இறையச்சத்திர்க்காக இவ்வுலகில் கிடைத்த பரிசு !

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை
பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ
நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ
அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய
வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு
நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத
பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு
இருக்கும்.


நிற்க.

இனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி
இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று
கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.


சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம்,
அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள்
சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி
கேட்க...

ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான்
எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை
தரமறுக்க...

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு,
தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க...

அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை
நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற...

அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ
உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம்
கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த,

அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப்
கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.

'அல்லாஹ் எங்கு சென்றான்...
அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா...
அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... "

...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார்.

இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி
வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை
எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின்
அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது
இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால்
பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள
புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.

மாஷா அல்லாஹ்.



இதற்கு முன்னரே...

அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை
அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது.

மேலும்,  20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து
அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம்
இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.

ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை
அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை
நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர்
எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே
சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து
கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம்
செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3)
சுப்ஹானல்லாஹ் !!
நன்றி.. முஹம்மது ஆஷிக்
அல்லாஹ் அவருக்கு அருள்  புரிவானாக.

கருத்துகள்