அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 17 மே, 2015

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்
மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.

உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் பாதிக்கின்றன.


பொருளாதார சிந்தனை
பொருளியல் சிந்தனைகள் மனித வரலாற்றில் அன்று முதல் இன்று வரை வளர்ந்து வந்திருக்கிறது. மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றிக்கு ஏற்றவாறு சிந்தனையும் மாறி வந்திருக்கிறது. ஆதிகாலத்து மனிதர்களும் தங்கள் பொருளியல் தேவைகளை நிறைவேற்றியுள்ளனர். விவசாயம் செய்யப்பட்டது, உடைகள் தயாரிக்கப்பட்டன, பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது, செல்வம் சேமிக்கப்பட்டது அத்தகைய சூழ்நிலைகளில் பொருளாதார சிந்தனை மேலும் வளர்ந்து பரிணாமம் அடைந்தது.

இன்றைய பொருளாதார கோட்பாடுகள்
இன்று ஒவ்வொரு நாடும் வெவ்வேறு பொருளாதார கோட்பாடுகளை பின்பற்றி வருவதை காண்கிறோம். ஒவ்வொரு நாடும் வெவ்வேறான பொருளாதார கோட்பாடுகளை பின்பற்றும்போது நாடுகளுக்கிடையே வேற்றுமை உருவாகிறது. பிரச்சினைகள் தோன்றுகின்றது.

இன்று உலகில் நிலவுகின்ற எல்லா பொருளியல் கோட்பாடுகளும் ஒரு சில நாட்டின் நன்மைக்காக, சில பிரச்சினைகளை போக்குவதற்காக பொருளியல் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிய பிறகு அத்தத்துவங்களும் செயல் இழந்து விட்டன.

மேலும் ஒரு நாட்டிற்கு பயனளித்த பொருளாதார திட்டம் மற்றொரு நாட்டிற்கு தீங்கு அளித்த உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணமாக, இங்கிலாந்து நாட்டிற்கு வாழ்வளித்த ஆடம்ஸ்மித் கோட்பாடுகள் ஜெர்மன் நாட்டிற்கு பேரிழப்பாக அமைந்தது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலக பொருளாதாரம்
மனிதர்கள் தாங்கள் வாழ்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதார திட்டத்தை சுய சிந்தனை மூலம் உருவாக்கி வாழ்கின்றபோது நாட்டிற்கு நாடு அது மாறுபடுகின்றது. அதனால் பிரிவு உண்டாகிறது சுயநலம் தோன்றி உலக மக்கள் சண்டையிட்டுக் கொள்ள நேரிடுகிறது. மனித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற பொருளாதார திட்டம் எந்த அளவிற்கு உலக மக்களுக்கு வழிகாட்டியாய் இருக்க முடியும் என்பதும் அடுத்த கேள்வி. ஏனெனில் மனிதர்கள் சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தில் மாறும் தேவைகளுக்கு ஏற்ப எவராலும் நீண்ட, நிலைத்த பொருளாதார கொள்கையை உருவாக்கிட இயலாது. இதனை கடந்த கால வரலாறு தெளிவாக மெய்பித்து இருக்கிறது.

ஏறத்தாழ 80 ஆண்டுகள் உலகை தனது கைப்பிடியில் வைத்திருந்த கம்யூனிசக் கொள்கை இன்று அழிந்து விட்டது. மேலும் எந்த ஒரு பொருளாதாரக் கொள்கையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்ததில்லை. இதனால் காலத்திற்கு ஏற்ப பொருளியல் தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகள், நிறைவு பெறாமலேயே இருந்து வருகின்றன. புதுப்புது கொள்கைகள் மனித சமுதாயத்தின் மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன.

உலகின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்திற்கு உள்நோக்கத்திற்கு வசதியாக பிற மக்களின் மீது தங்களின் பொருளாதாரத் கருத்துக்களைத் திணித்து வருகின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. புதிதாக ஒரு கருத்து உருவாகும் போது அது எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடியது என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

மோசமான பாதிப்பு ஏற்படுகின்ற போது அக்கருத்தை உரியவர்கள், நடைமுறை படுத்தியவர்கள் ஒன்று உயிருடன் இருப்பதில்லை அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. பாதிப்புக்கு உள்ளான மனிதர்களுக்கு துன்பம் எவ்வகையிலும் துடைக்கப்படுவது இல்லை. எத்தகைய இழப்பீடும் கொடுக்கப்படுவது இல்லை. அவ்வாறென்றால் யார் மனிதர்களின் பொருளியல் வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை அறிவிக்கக்கூடும் என்ற கேள்வி எழுகின்றது.

எவனால் இவ்வுலகு தோற்றுவிக்கப்பட்டதோ, எவன் இவ்வுலகில் ஓர் இயற்கைத் தன்மையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கின்றானோ எவனின் அறிவுரை உலக மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்குமோ, அவனே தான் பொருளாதார வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியவன் ஆவான். அவ்வகையில் இவ்வுலகைப்படைத்த அந்த ஓர் இறைவன் தான் வழிகாட்டத் தகுதியானவன் அவனது வழிகாட்டுதல் தான் நேரிய வழியாகும் இக்கருத்தை இங்கிலாந்து நாட்டு பொருளியல் நிபுணர் ஆடம்ஸ்மித் தமது நூலில் வலியுறுத்தியிருக்கிறார்.

எனவே, இறைவன் உருவாக்கிய இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாமிய பொருளாதாரம்
நாம் வாழும் இவ்வுலகைப் படைத்து, அதில் மனிதர்கள் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு வசதியை உண்டாக்கிய அல்லாஹ், மனிதர்கள் அமைதியாகவும், செழிப்புடனும் வாழ்வதற்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளையும் பொருளாதாரத் திட்டங்களையும் அவனது திருத்தூதர்(ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கின்றான்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுக் கூறுங்கள். (அல்குர்ஆன் 62:10)

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் சகல வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தினோம் (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்தவதோ வெகு சொற்பம். (அல்குர்ஆன் 7:10)

நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் (அல்குர்ஆன் 2:188)

இன்னும் இது போன்ற பல வசனங்களில் பொருளாதாரத்தைப் பற்றி நமது இறைவன் கூறுகிறான்.

இன்றைய தேவை இஸ்லாமிய பொருளாதாரம்
இஸ்லாமிய பொருளாதாரப் கோட்பாடுகள் கடந்த காலத்தில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. எடுத்துக்காட்டாக வறுமை ஒழிப்புத்திட்டத்தை மேற்கொண்டு ஜகாத் மூலம் ஏழைகளுக்கு முறையாக விநியோகித்து அது வெற்றியும் பெற்றுள்ளது.

வாணிப நெறிமுறைகள் சீரிய முறையில் கையாளப்பட்டுத் தடையில்லா வர்த்தகம் நடைபெற உதவியுள்ளது. வட்டியினை முழுமையாக ஒழித்துப் பொருளாதாரத் துறை தடையில்லாமல் எளிதாகச் செயல்பட ஏற்பாடு செய்தது.

சில சீர்திருத்தச் சட்டங்கள் செம்மையாகவும், இயற்கையாகவும் அமல் செய்ததன் மூலம் விவசாய உற்பத்தி பெருகி விவசாயிகள் தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்தது. கடன், கொடுக்கல், வாங்கல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

முதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதன் மூலம் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுத்தது. நியாய விலை, நியாயமான கூலி, பொருளாதார நீதி போன்றவை முதன்முதலாகச் செயல் வடிவம் கொடுக்கப்பட்டன.
மேற்கூறிய அனைத்திலும் உலக வரலாற்றில் முதன்முதலாகச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது எதுவோ, அதுதான் இஸ்லாமிய பொருளாதார திட்டங்களாகும்.

பல அறிஞர்கள் மாபெரும் ஆராய்ச்சி மூலம் உண்டாக்கிய உலக பொருளாதார திட்டங்கள் ஏற்படுத்திய பேரழிவு மற்றும் துன்பங்கள் ஆகியவற்றை உணர்ந்த பின், மனித குலத்திற்கு ஒரே காலத்தில் நன்மையளிக்கக்கூடிய திட்டங்கள் காணப்பெறாமல் தத்தளித்ததுக் கொண்டிருக்கிற இக்காலத்தில், இஸ்லாமிய பொருளாதாரம் சோதனையாக அளிக்கப்படுகிறது. இதன் செயல்பாட்டினை அறிவுக் கண் கொண்டு வல்லுநர்கள் ஆராயட்டும். மக்களுக்கு நன்மையளிப்பதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளட்டும். ஆனால் ஆராயும் முன் மனக்கோணல் இல்லாமல் உண்மையை உள்ளபடி தெரிந்து கொள்ளும் நல்ல நோக்கத்துடன் ஆராய்ந்து தெளிவு பெற்றுக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி:சுவனப்பாதை மாத இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!